உலகளாவிய இறுதி ஒப்புதலை பெற்ற சவூதி; எக்ஸ்போ 2030க்கு பூரண தயார்!

உலகளாவிய இறுதி ஒப்புதலை பெற்ற சவூதி; எக்ஸ்போ 2030க்கு பூரண தயார்!

காலித் ரிஸ்வான்

உலக எக்ஸ்போ 2030 கண்காட்சியினை சவூதி அரேபியா நடாத்துவதானது உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சிகள் பணிகத்தின் (BIE) பொது சபை கூட்டத்தின் போது, சவூதியின் பதிவு ஆவணத்தை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு இந்த முக்கிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது எக்ஸ்போ 2030 இன் அடுத்த கட்ட ஆயத்தப் பணிகளின் ஆரம்பத்திற்கான துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. 2030ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2031 மார்ச் 31 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, 6 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட மிகப் பெரிய வளாகத்தில் நடத்தப்பட உள்ளதோடு இது 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் 195 நாடுகளுக்கும் அதிகமான பங்கேற்புகளை ஈர்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெற்ற மேற்குறிப்பிட்ட நிகழ்வின்போது, உலக எக்ஸ்போ கொடியை சம்பிரதாய பூர்வமாக சவூதி அரேபியக் குழுவிற்கு BIE கையளித்தது. இந்த நிகழ்வை முன்னிட்டு, மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும், சவூதி அரேபியாவின் விரிவான விஷன் 2030 வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் உலகத் தரம் வாயந்த ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக சவூதி தரப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ரியாத் நகரத்தின் அரச குழுமத்தின் செயலாளராக செயல்படும் தலைமை செயல் அதிகாரி எஞ்சினியர் இப்ராஹிம் அல்-சுல்தான் கருத்து தெரிவிக்கையில், சவூதி அரேபியா தனது பதிவு ஆவணத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு மிகவும் முன்னதாகவே சமர்ப்பித்து சாதனை படைத்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றது என்றும், இது சாதாரணமாக எடுக்கும் நேரத்தின் பாதிக்குக் குறைவான நேரமாகும் எனவும், இது நாட்டின் திறமையையும் உலகளாவிய உறுதிப்பாட்டையும் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த முக்கியமான சாதனைக்குத் அந்நாட்டுத் தலைமை வழங்கிய உறுதியான ஆதரவுக்காக அவர் நன்றியை தெரிவித்தார். அது இச்சாதனைக்கு முக்கிய காரணியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போது அதிகாரப்பூர்வ ஒப்புதலை பெற்றுள்ளதையடுத்து, சவூதி அரேபியா சர்வதேச நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கும் பணிகளை ராஜதந்திர வழிகள் மூலம் ஆரம்பிக்க உள்ளது.

இதன் மூலம், இதுவரை நடத்தப்பட்ட உலகக் கண்காட்சிகளிலிருந்து மிகவும் வேறுபட்ட, பெருந்திட்டங்களை கொண்ட நிகழ்வாக அமைவதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

சர்வதேச வணிக உலகம் எக்ஸ்போ 2030-ஐ எதிர் பார்த்திருக்கும் இந் நிலையில், ரியாத் நவீன முயற்சி, கூட்டாண்மை மற்றும் நிலைத்த வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான உலக அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.