சவூதி மன்னரின் விருந்தினராக 20 இலங்கையர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு
சவூதி அரேபியாவின் மன்னரும் இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள், சிவில் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், சமூகத்தின் முக்கிய நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் கொண்ட இந்தக் குழுவினர் நாளை (30) வெள்ளிக்கிழமை மக்கா நோக்கி பயணமாகவுள்ளனர்.
இவர்களை வழியனுப்பும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியின் தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
இந்த திட்டத்திற்காக இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் சவூதித் தூதுவர் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்குகின்ற முக்கியஸ்தர்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த கௌரவ அன்பளிப்பானது அவர்களின் பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாகவும் எதிர்காலத்தில் அவர்களது சேவைக்கான ஊக்கமாகவும் அமைகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் புனிதத் திட்டத்தில் பங்கேற்பது ஹஜ் கிரியை நிறைவேற்றுவதற்கான ஒரு பெரிய ஆன்மீக வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் நம்பிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
இந்த ஹாஜிகள் தங்கள் தாய் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த தூதர்களாக இருக்க வேண்டும் என்றும் சவூதி அரேபிய அரசாங்கம் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு வழங்கும் இந்த உயர் சேவை, மற்றும் முழுமையான பராமரிப்பு பொறுப்புடன் தாய் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நாட்டை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தவும் தங்கள் நடத்தை மற்றும் நெறிமுறைகள் மூலம் இலங்கை முஸ்லிம்களின் கௌரவமான விம்பத்தை தொடர்தேர்ச்சையாக கையிலேந்திக் கொள்ளுமாறும் ஹஜ் யாத்திரீகர்களுக்கான அரசின் அளப்பரிய முயற்சிகள் மற்றும் சேவைகளின் தன்மையை வெளிப்படுத்தும் உண்மையின் குரலாக இருக்கவும் தூதுவர் கேட்டுக்கொண்டார்.
Comments (0)
Facebook Comments (0)