கிழக்கு மாகாண சபை தேர்தல்: முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் இணைந்து புதிய கூட்டணி?
றிப்தி அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் மேலும் சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பொன்றினை உருவாக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.
இந்த முஸ்லிம் கூட்டமைப்பின் வெள்ளோட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக இணைந்து செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், புதிய கூட்டணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைவது குறித்து இதுவரை எந்தப் பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆயினும், சிறு அரசியல் குழுக்களும், நபர்களும் உள்ளீர்;க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று பொத்துவில் பிரதேச சபையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபிற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு இறு தரப்பினரும் இணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவார் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட விருப்பம் வெளியிட்டிருந்தார். எனினும், எமது கட்சியின் பொத்துவில் அமைப்பாளர் ஏ.எம். பாசித் சம்மதம் தெரிவிக்காமையினாலேயே முஷாரப், சுயேட்சையில் களமிறங்கினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே அமைப்பாளரே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடினோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் இடம்பெற்ற பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தினை இழந்ததுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தினை இழந்துள்ளன.
இதன் காரணமாகவே விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகி;ன்ற மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியினை கைப்பற்றும் நோக்கிலேயே முஸ்லிம் கூட்டமைப்பினை உருவாக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)