முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி: வக்பு சபையின் கட்டளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும்

முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி: வக்பு சபையின்  கட்டளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும்

என். எம். எம். மிஃலி (நளீமி)
முன்னால் பிரதி ஆணையாளர் நாயகம் 
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
mifly1234@gmail.com

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வக்பு சபை கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி (கல்லூரி)யை முஸ்லிம் அறக்கட்டளையாக (வக்பாக) பதியப்பட வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டளைக்கு எதிராக, கல்லூரியின் சர்ச்சைக்குரிய முகாமைத்துவ சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி விண்ணப்பித்த மனு கடந்த திங்கட்கிழமை (16) நிராகரிக்கப்பட்டது.

வாதி, பிரதிவாதிகளின் வாய்மூல, எழுத்துமூல கடுமையான வாத, பிரதிவாதங்களை நன்கு அவதானித்த மேன்முறையீட்டு நீதியரசர்கள் மேற்கூறப்பட்ட மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததன் மூலம் வக்பு சபையின் கட்டளையை உறுதிப்படுத்தியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இலங்கை முஸ்லிம்களின் அறக்கட்டளைகள், தர்ம நிறுவனங்களை பாதுகாப்பதற்கும், அவை நிறுவப்பட்ட இலக்குகளை அடைவதற்கும் வழிவகுக்கும் ஒரு மைல்கல்லாகும்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாத, பிரதிவாதங்கள்

வக்பு சபையின் கட்டளையை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்திய வாதி தரப்பில் ஆஜரான பிரபல சட்டத்தரணி தனது பக்க நியாயத்தை பின்வருமாறு முன்வைத்தார். கள்-எளிய முஸ்லீம் மகளிர் அரபிக் கல்லூரி 1991ஆம் ஆண்டு 46ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்டிருப்பதால், பிறிதொரு சட்டத்தின் மூலம் இந்த கல்லூரியை கட்டுப்படுத்த, நிர்வகிக்க முடியாது.

எனவே, 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டத்தின் கீழ் இந்தக் கல்லூரியை பதிவு செய்யவோ, அல்லது மேற்பார்வை செய்யவோ அதிகாரம் இல்லை என்ற வாதம் மிக ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேற்படி வாதத்தை தர்கரீதியாகவும், சட்டரீதியாகவும் பிழையென நிரூபித்தனர். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைப்பது (Incorporation) என்பதும், பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஆளப்படுவது, நிர்வகிக்கப்படுவது என்பதும் வெவ்வேறானவை என்பதை பல ஆதாரங்களுடன் முன்வைத்தனர்.

கூட்டிணைத்தல் என்பது ஒரு வகை பதிவு மாத்திரமே. மாறாக கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் ஏனைய சட்டங்கள் செல்லுபடியாகாது என்பதற்கான ஷரத்துக்கள், பிரிவுகள் 1991ஆம் ஆண்டு 46ஆம் இலக்க கூட்டிணைக்கப்பட்ட பாராளுமன்ற சட்டத்தில் எங்குமே இல்லை என்ற விடயம் குறித்துக்காட்டப்பட்டது.

Wakf Tribunal என்ற மாற்று வழிமுறை (Alternative Remedy) இருக்கும் போது நியாயமான காரணமின்றி அந்த வழிமுறையை நாடாது, வாதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதும் பிழை என்ற மூல ஆட்சேபனையையும் (Preliminary objection) முன்வைத்தனர்.

மேலும் பிரதிவாதித் தரப்பு சட்டத்தரணிகள் 1959ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரி 1991ஆம் ஆண்டு தான் மேற்படி சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்டது. எனவே இந்த கூட்டிணைப்பு சட்டத்தின் மூலம் கல்லூரியின் நோக்கு, இலக்கு, இயல்பு என்பன போன்ற எதுவுமே மாறவில்லை என்றும், மாறாக கல்லூரியை ஸ்தாபித்தவர்களின் உயரிய இலக்கு அவ்வாறே முன்கொண்டு செல்லப்படுகின்றது என்றும் குறிப்பிட்டனர்.

வக்பு உடமையாக இந்தக் கல்லூரி பதிவு செய்யப்படுவதால் குறிப்பிட்ட நோக்கம், இலக்கு  மேலும் வெளிப்படையாகவும், பொறுப்புக்கூறக் கூடியதாகவும்  அமைகின்றது என்ற ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு

மேன்முறையீட்டு நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்து, பிரதிவாதிகள் முன்வைத்த மூல ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டு குறிப்பிட்ட தடை உத்தரவு மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தது.

சமூகப் பரப்பில் கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி சம்பந்தமாக வக்ப் சபை வழங்கிய கட்டளை பற்றி பிழையான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட சிலரால் பரப்பப்படுகின்றன. அவை பற்றிய சில தெளிவுகளை முன்வைப்பது எனது கடமை என நினைக்கின்றேன்.

ஐயமும் தெளிவும்

1956ஆம் ஆண்டு முதல் வக்ப் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, 1959ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியை நிறுவிய ஸ்தாபகர்கள் ஏன் இதனை வக்ப் சட்டத்தின் கீழ் பதியவில்லை?   

இந்த வினாவுக்கான பதிலை பின்வருமாறு வழங்கலாம் என நினைக்கின்றேன். அவையாவன: 

1.    உள்யதார்த்தம் வெளித்தோற்றங்களை மிகைக்கின்றது (Substance prevails over forms) என்பது மேற்கத்தேய சட்டத்தில் மாத்திரமன்றி இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திலும் மிக முக்கியமான ஓர் அடிப்படை விதியாகும். "செயற்பாடுகள் எண்ணங்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன".

இந்தக் கல்லூரியை ஸ்தாபித்த ஸ்தாபகர்களின் நோக்கம், அவர்கள் அது பற்றி மக்களிடம் முன்வைத்த கருத்துக்கள், கோரிக்கைகள், கல்லூரியின் இலக்கு, செயற்பாடு, உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம்கள் இக்கல்லூரிக்கு வழங்கிய அங்கீகாரம், நன்கொடைகள், அரசாங்கம் இதற்கு வழங்கிய சலுகைகள், வரப்பிரதாசங்கள் போன்றவற்றை ஒருவர் நியாயமான திறந்த மனதுடன் முழுமையாக பார்க்கும் போது இது முஸ்லிம் சமூகத்தின் பொது நன்மைக்காக (Public benefit) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை (வக்ப் ) என்பதைப் புரிந்து கொள்வர்.

2.    ஸ்தாபகர்களின் கூட்டுப் பிரகடனம்: கல்லூரியை ஸ்தாபித்த ஸ்தாபாகர்கள் ஐவரும் ஒன்றாக இலங்கை முஸ்லிம் சமூகத்திடம் 23.07.1961 திகதியிட்ட பகிரங்க நிதி உதவிகோரல் படிவத்தில் இது ஒரு வக்ப் உடமை என்பதை மிகத தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

3.    அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை: இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமன்றி உலகளாவிய முஸ்லிம்களும் மேற்படி கோரிக்கையை ஏற்று மிகப் பெரும் தொகையை நன்கொடையாக கல்லூரிக்கு வழங்கினர்.

அன்றிருந்த அரசாங்கமும் இந்தக் கல்லூரிக்கு பலரும் நன்கொடை வழங்க வேண்டும் என்ற உயர் நோக்கில் இந்த கல்லூரியை அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையாக 28.03.1964ஆம் ஆண்டு 13998ஆம் இலக்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியது. 

இந்தப் பிரகடனம் மூலம் கல்லூரிக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு  வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இன்றும் அங்கீகரிக்காப்பட்ட அறக்கட்டளையாக (Approved Charitable Institution) இக்கல்லூரி திகழ்கின்றது.

4.    நல்லெண்ண செயற்பாடு: நன்மையான ஒரு விடயத்தை ஒருவரோ, பலரோ இணைந்து ஆரம்பிக்கும் போது, அங்கே பிரச்சினைகள், சர்ச்சைகள் தோன்றலாம் என எதிர்மறையாக சிந்திப்பதை விட நல்லெண்ண அடிப்படையிலே அதனை முன்கொண்டு செல்கின்றனர்.

அவ்வாறே 1956இன் 51ஆம் இலக்க வக்ப் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் அறக்கட்டளை கட்டாயம் பதியப்பட வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. ஆனால் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தூரநோக்குடன் அதனை ஸ்தாபாகர்கள் பதிவு செய்திருந்தால் இவ்வாறான சர்ச்சைகள், சீர்கேடுகள் இடம்பெற்றிராது, அல்லது பிற்பட்ட காலத்தில் அந்த அறக்கட்டளைக்கு ஒரு பாதிப்பு இடம்பெறலாம் என சம்பந்தப்பட்ட முஸ்லிம் சமூக உறுப்பினர்கள் கருதுவதாயின் அதனை வக்பாக  பதிவு செய்ய வக்ப் சட்டத்தில் இடம் இருக்கின்றது. 

உதாரணமாக, இருவர் இஸ்லாமிய முறைப்படி ஈஜாப், கபூல், இரு சாட்சிகளுடன் -அரச பதிவின்றி- திருமணம் முடிக்கின்றனர். இது -மார்க்க, நாட்டு- சட்டப்படி குற்றம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட தம்பதியினருக்கு மத்தியில் சர்ச்சைகள், பிணக்குகள் தோன்றி எல்லை கடந்து செல்லும் போது, அரச தரப்பு தலையீட்டை எதிர்பார்ப்பதாயின் (நாட்டு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உரிமைகளை அவர்கள் பெற வேண்டுமெனில்) அந்தத் திருமணம் அரச சட்டப்படி பதியப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறே இந்தக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்ட முதல் இரண்டு தசாப்தங்களில் சுமுகமாக செயற்பட்டது. அப்போது வக்ப் சட்டத்தின் தலையீடோ அல்லது ஒரு இறுக்கமான சட்டமுறைமையோ தேவைப்படவில்லை. 

1980களில் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாகத்தான் 1991இன் 46ஆம் இலக்க கூட்டிணைக்கப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட்டது. (இது பற்றி பின்னர் விளக்குகின்றேன்.) 2020 களில் முஸ்லிம் சமூகத்தின் பொதுச் சொத்தான இந்தக் கல்லூரியின் இருப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல், முஸ்லிம் சமூகத்தின் அறக்கட்டளைகளை பாதுகாப்பதற்காக தீர்க்கதரிசனத்துடன் எமது முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வக்ப் சபையின் தலையீட்டை வேண்டிநின்றது.

கல்லூரியின் 1991ஆம் ஆண்டின்  46ஆம் இலக்க கூட்டிணைப்பு சட்டம் ஏனைய சட்டங்களை மிகைக்கின்றதா? 

வக்பு சட்டத்தின் கீழ் இந்தக் கல்லூரியை பதிவு செய்ய முடியாது என்பதற்கு வாதி தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட பதில் வாதங்கள் ஆரம்பித்தில் குறிப்பிடப்பட்டன.

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்ட இந்த கல்லூரியில் பிற சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற வாதம் தர்க்க ரீதியான உண்மை என்றிருப்பின், அந்த விடயம் மிகத் தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டத்துடன் ஓரளவுக்கேனும் பரீட்சயம் உள்ளவர்களுக்கு புரியும்.

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி பிற சட்டங்கள் நுழைய முடியாத தன்னிறைமை கொண்ட ஒரு சிற்றரசாக சிலர் கற்பனை செய்கின்றனர்.  

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் (விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்காவிட்டால்) செல்லுபடியாகும். அதனால் தான் இங்கு சேவை புரிகின்ற ஊழியர்களுக்கான சேமலாப (EPF), நம்பிக்கை(ETF) போன்றவைகள் செலுத்தப்படுகின்றன.

கூட்டிணைக்கப்பட்ட சட்டத்தின் பின்னனி

கூட்டிணைக்கப்பட்ட சட்டம் அமுலுக்கு வந்த பின்னனி, அதன் அமுலாக்கம் பற்றி சில விளக்கங்களை வழங்குவது, இப்பிரச்சினையை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள உதவும் என நினைக்கின்றேன்.

1980களில் இதுபோன்ற ஒரு சர்ச்சை நிதிமுறைகேடு சம்பந்தமாக தோன்றி அது கம்பஹ நீதிமன்றம் (Case No. 24417/M) வரை சென்றது. அதனைத் தொடர்ந்து, இவ்வாறான முறைகேடுகள் கல்லூரியில் இடம்பெறக் கூடாது என்பதற்காக அன்றிருந்த நிர்வாகிகளும், முஸ்லீம் தலைவர்களும் இணைந்து கல்லூரியை 1991-ன் 46-ம் இலக்க சட்டத்தின் மூலம் கூட்டிணைத்தனர்.

இந்த கூட்டிணைப்பு சட்டத்தின் பிரிவு 4 இன் பிரகாரம் கல்லூரிக்கான சட்டயாப்பு  (Rule) உருவாக்கப்பட்டது. அந்த சட்டயாப்பின் ஷரத்து 4 இன் படி 21 வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம் ஆண்களைக் கொண்ட ஓர் சொஸைட்டி (Society) உருவுருவாக்கப்பட வேண்டும், ஷரத்து 9 இன் பிரகாரம் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப் படுவதோடு, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை முகாமைத்துவ சபை தெரிவு செய்யப்படல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இங்கு ஆச்சரியத்தக்க விடயம் என்னவெனில் இந்தக் கல்லூரி பாராளுமன்த்தினால் கூட்டிணைக்கப்பட்டிருப்பதால், பிற வக்ப் சட்டம் இதில் தலையிட முடியாது, 1991ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கூட்டிணைப்பு சட்டமே அமுலாகின்றது எனக் கூறும் "நிர்வாகத்தினர்" கூட்டிணைப்பு சட்டத்தையே ஒரு தூசுக்கேனும் மதியாமல் அதனை முழுமையாக புறக்கணித்து வருவதாகும்.

கூட்டிணைக்கப்பட்ட சட்டம் அமுலுக்கு வந்து 35 வருடங்கள் கடந்து போனாலும் கூட,  ஐந்து ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒரு ஸ்தாபக உறுப்பினரின் குடும்ப அங்கத்தவர்களின் ஆட்சியும் அதிகாரமும் கோலோச்சி செய்கின்றது. இது வரை கூட்டிணைப்பு சட்டத்திலோ, சட்டயாப்பிலோ குறிப்பிடப்பட்ட பிரகாரம் சொஸைட்டியோ, வருடாந்த பொதுக்கூட்டங்களோ வெளிப்படையாகவும் பொறுப்புக்குகூறலுடன் இடம்பெறவில்லை.

அவ்வாறு இடம்பெற்றிருப்பின் இன்று தோன்றியுள்ள சர்ச்சைகளோ, நீதிமன்றங்களிடம் சென்று நீதி கோரவேண்டிய அவசியமோ அல்லது வக்ப் சபையில் இந்தக் கல்லூரியை வக்பு ஆக பதியுங்கள் என்று மன்றாட வேண்டிய தேவையோ ஏற்பட்டிருக்காது.

கூட்டிணைக்கப்பட்ட சட்டம் வக்பு சட்டத்துடன் இயைந்துசெல்கின்றது.

கல்லூரியின் கூட்டிணைக்கப்பட்ட சட்டமும், வக்ப் சபையின் மூலம் பதிவு செய்யப்படும் ஒரு முஸ்லிம் அறக்கட்டளை அல்லது முஸ்லிம் தர்ம நிதியமும் பெரும்பாலும் ஒரே இலக்கை அடிப்படையாகக் கொண்டதாகும். 

குறிப்பிட்ட நிறுவனம் தனது இலக்கை, நோக்கத்தை வெளிப்படையாகவும், பொறுப்புக்கூறக் கூடியதாவும் பயணிக்க வேண்டும் அதனை உறுதிசெய்ய வேண்டும். ஆனால் கல்லூரியின் நிர்வாகத்தினர் அதற்கு மாற்றமாக செயற்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட கூட்டினைப்பு சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றத்திலும், முஸ்லிம் அறக்கட்டளை என்றவகையில் வக்ப் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முஸ்லிம் பொது நிறுவனங்களைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமை

இலங்கையில் காணப்படும் அதிகமான முஸ்லிம் அறக்கட்டளைகள், பொது நிறுவனங்கள் ஒரு சில தனிநபர்களால் ஸ்தாபிக்கப்பட்டாலும், அதன் பௌதீக, தார்மீக, அறிவுசார் வளர்ச்சிக்கு பலரது பங்களிப்பு நேரடி, மறைமுக காரணிகளாக அமைந்துள்ளன.

இந்தப் பின்னனியிலும் மேற்போந்த அறநிலையங்களை தனியார் உடமை என்றோ பொது  உடமையன்று என்றோ வாதிக்க முடியாது. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இவ்வாறான முஸ்லிம் பொது அறநிலையங்கள் அதனை நிர்வகிக்கும் ஸ்தாபாகர்களின் வாரிசுகளாலும், மற்ற நிர்வாகிகளாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.

1956 இன் 51ஆம் இலக்க வக்பு சட்டத்தில் அவசரமாகவும், அவசியமாகவும் கொண்டுவர வேண்டிய பல திருத்தங்கள் இருப்பினும் கூட, எமது முஸ்லிம் அறக்கட்டளைகளை பாதுகாப்பதற்குரிய சிறந்த பொறிமுறை வக்பு சட்டத்தின் கீழ் வக்பு ஆக பதிவதாகும். சம்பந்தப்பட்டவர்கள் தமது பொறுப்பை, கடமையை நிறைவேற்றாவிட்டால் முஸ்லிம் சமூகத்தின் சாபத்திற்கு மாத்திரமன்றி, இறை கோபத்திற்கும் உட்படவேண்டிவரும்.